கொல்கத்தா அருகே ஹோட்டலில் தீ விபத்து - தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 14 பேர் பலி!

கொல்கத்தா அருகே ஃபால்பட்டி மச்சுவா பகுதியில் உள்ள ஹோட்டலில் இரவு, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 5வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
சிலர் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஹோட்டலில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதன் பின்னர் ஹோட்டலில் அவர்கள் சென்று பார்த்த போது உள்ளே, வெவ்வேறு அறைகளில் 14 பேர் பலியானதை கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து, கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் குமார் வர்மா சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து ஆராய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகி உள்ள விவரம் வெளியாகி இருக்கிறது. கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு, குழந்தைகள் என 3 பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.