1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்திற்கு 2.76 டி.எம்.சி. தண்ணீரை திறக்க வேண்டும்..!

1

காவிரியில் தண்ணீரை பங்கிடுவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர் பிரச்னை நீடித்து வந்த நிலையில், அதனை தீர்த்து வைக்க காவிரி மேலாண்மை ஆணையம் 2018-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதற்கு உறுதுணையாக காவிரி ஒழுங்காற்று குழுவும் செயல்பட்டு வருகிறது. இரு மாநில அணைகளில் உள்ள நீர் இருப்பு, மழை பொழிவு உள்ளிட்ட விவகாரங்களை ஆய்வு செய்து தண்ணீர் திறப்பது தொடர்பாக உத்தரவை ஆணையம் பிறப்பிக்கிறது.

காவிரி மேலாண்மை ஆணையம் என்னதான் உத்தரவுகளை போட்டுக்கொண்டே இருந்தாலும் அதனை கர்நாடகம் தொடர்ந்து செயல்படுத்த மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரைத்த தண்ணீர் என்பது கடந்த ஆண்டு முழுவதும் ஒருமுறைக் கூட கிடைக்கவில்லை. 

இதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்த கர்நாடகாவுக்கு அதிரடி உத்தரவு போடப்பட்டது. இதனால் குறைந்த அளவு தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்துவிட்ட நிலையில், அதனை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது.

கடந்த முறை நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜனவரி மாதம் முழுவதும் வினாடிக்கு 1,030 கன அடி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அதனை கர்நாடக அரசு துளிகூட மதிக்கவில்லை. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக காவிரியில் வினாடிக்கு 1000 கன அடிக்கும் குறைவாகவே தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வெறும் வினாடிக்கு 151 கன அடி தண்ணீர் மட்டும்தான் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 600 கன அடி வெளியேற்றப்படுவதால் நீர் மட்டமும், நீர் இருப்பும் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இதனால் கர்நாடகம் பரிந்துரைத்த அளவு தண்ணீரை திறக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று காணொலி காட்சி வாயிலாக கூடியது. தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா என 4 மாநில அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஜனவரி மாதம் தமிழகத்திற்கு காவிரியில் வழங்க வேண்டிய பங்கான 2.76 டி.எம்.சி. தண்ணீரை திறக்க வேண்டும் எனவும், பிப்ரவரி 2.5 டிஎம்சி தண்ணீரை திறக்கவும் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பார்த்தால் வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும். அதுமட்டுமின்றி மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான பங்கையும் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடவுள்ளது. அதில் இந்த பரிந்துரை ஏற்கப்படுமா அல்லது புதிய உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்ற விவரங்கள் தெரியவரும்.

Trending News

Latest News

You May Like