தோல்வி பயத்தில் தற்கொலை செய்த +2 மாணவி பாஸ்..!

பிளஸ் டூ தேர்வுகள் கடந்த மார்ச் மூன்றாம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது.
இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
இந்த ஆண்டு 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இது கடந்த ஆண்டு விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் சுமார் 5% மாணவர்கள் தோல்வியை சந்தித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் தேர்வு முடிவு பயத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் முடிவுகளை அவர் 400க்கும் அதிகமான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருக்கிறார். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே படுகை புது தெருவை சேர்ந்த புண்ணியமூர்த்தி மகள் ஆர்த்திகா, பாபநாசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்தார். தேர்வு முடிந்த நிலையில் தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாக இருந்த நிலையில் வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டு இருந்த மாட்டு கொட்டகையில் தனது துப்பட்டாவால் ஆர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை உடனடியாக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ஆர்த்திகா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது தொடர்பாக பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே ஆர்திகா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தேர்வு முடிவு பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தேர்வு முடிவு வெளிவந்த நிலையில் ஆர்த்திகா 413 மதிப்பெண்களை மொத்தமாக பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். தமிழில் 72 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 48 மதிப்பெண்களும், இயற்பியலில் 65 மதிப்பெண்களும், வேதியியலில் 78 மதிப்பெண்களும், தாவரவியலில் 70 மதிப்பெண்களும், விலங்கியலில் 80 என மொத்தம் 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கும் நிலையில் உறவினர்கள் கதறி துடித்து வருகின்றனர்.
தோல்வி பயத்தால் தற்கொலை செய்த மாணவி, பாஸ் ஆன நிலையில் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.