17 வயது சிறுமியை ஒரு அறையில் அடைத்து வைத்து போதை மருந்து கொடுத்து கற்பழிப்பு..!!

மங்களூரு புறநகரில், 17 வயது சிறுமிக்கு மதுபானம் மற்றும் போதை மருந்து கொடுத்து கற்பழித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு புறநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட முடிப்பு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு உள்ள ஒரு வீட்டில் 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அந்தச் சிறுமியை ஒரு அறையில் அடைத்து வைத்து போதை மருந்து மற்றும் மதுபானம் கொடுத்து 3 பேர் கற்பழித்துள்ளனர். இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், மங்களூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரளாவைச் சேர்ந்த ஒரு வாலிபர், மங்களூருவைச் சேர்ந்த 2 வாலிபர்கள் என மொத்தம் 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிலம்பிகுட்டே பகுதியில் வைத்து ஒரு வாலிபர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதுதொடர்பாக ஏற்கனவே போலீசார் வழக்குப்பதிந்து அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதுபோல், போலீசில் புகார் அளிக்க சென்ற நேரத்தில் அந்த சிறுமியின் செல்போன் எண்ணை ஒரு போலீஸ் ஏட்டு பெற்றிருந்தார். பின்னர் அவரும் செல்போன் மூலம் அந்த சிறுமியிடம் ஆபாசமாக பேசியும், குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்-அப்பில் ஆபாச தகவல்கள், படங்கள், வீடியோக்கள் அனுப்பியும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த போலீஸ் ஏட்டுவை கைது செய்தனர். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த சிறுமி தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருவதால் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மகளிர் போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.