1. Home
  2. தமிழ்நாடு

பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேருக்கு உடல்நலக்குறைவு.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு..!

பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேருக்கு உடல்நலக்குறைவு.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு..!


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் சித்திரைவேல். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதன் கட்டுமானப் பணிக்கு நேற்று முன்தினம் 40 தொழிலாளர்கள் வந்துள்ளனர்.

அவர்கள் சாப்பிடுவதற்காக அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வினோத் (42) என்பவர் அறந்தாங்கி - புதுக்கோட்டை சாலையில் உள்ள பிரியாணி கடையில் 40 பிரியாணி பார்சல்களை வாங்கி வந்தார். பின்னர் சித்திரைவேல் 40 பேருக்கும் பிரியாணி பார்சல்களை வழங்கினார்.

இந்த பிரியாணி பார்சல்களை அவர்கள் உடனடியாக சாப்பிடாமல், வேலை முடிந்து வீட்டிற்கு கொண்டு சென்று வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை, பிரியாணி சாப்பிட்ட 27 பேருக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து 27 பேரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து அந்த பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜேம்ஸ் மற்றும் அதிகாரிகள், அறந்தாங்கி போலீசார் முன்னிலையில் ‘சீல்’ வைத்தார். இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (6-ம் தேதி), பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று 27 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில், மேலும் 13 பேர் இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பிரியாணி சாப்பிட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

கட்டிடத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது கெட்டுப்போன பிரியாணியா..? என்பது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like