மா.நன்னன் எழுதிய 124 புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்..!

“புலவர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மா.நன்னன் எழுதிய 124 புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படும். பெரியார், கலைஞர், மா.நன்னன் உள்ளிட்டோர் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக மொழிக்காக பாடுபட்டவர்கள். நன்னன் அப்பழுக்கற்றவர். நேர்மையாக விளங்கியவர். அவரது பேச்சு ஆசிரியர் வகுப்பு நடத்துவதுபோல் இருக்கும். எழுத்தால், சிந்தனையால் மா.நன்னன் தொடர்ந்து வாழ்வார். விழுப்புரத்தில் நடந்த இளைஞரணி கூட்டத்தில் புலவர் நன்னனுக்கு மோதிரம் அணிவித்தேன்.
திராவிடக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட அனைவரும் கலைஞரின் வழித்தோன்றல்கள்தான். திராவிட கொள்கையை ஏற்றுள்ள அனைவரும் கலைஞரின் வழித்தோன்றல்கள். அடக்கு முறைக்கு வழித்தோன்றல் இருப்பதை போல, விடுதலை இயக்கத்திற்கும் வழித்தோன்றல்கள் இருப்பார்கள். ஆளுநர் ரவி தொடர்ந்து இங்கு இருக்க வேண்டும். அவர் இருந்தால்தான் நமது கொள்கையை நாம் வளர்க்க முடியும். பிரச்சாரத்தை நாம் சிறப்பாக செய்ய இயலும்.
இந்தியாவிற்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும். ஒன்றிய பாஜக அரசின் ஆட்டம் எல்லாம் இன்னும் சில மாதங்கள்தான். ஜனநாயகம், சமூகநீதி, மதச்சார்பின்மை, அரசியல் சட்டம் என்று அனைத்தையும் அழிக்க முயற்சிக்கும் பாஜக ஆட்சி முடியப் போகிறது. இந்தியாவிற்கு விடியல் பிறக்கப் போகிறது” என்றார்.