11 ஆயிரம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப மைக்ரோசாஃப்ட் முடிவு..!
பிரபல சாஃப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று (ஜன.18-ம் தேதி) சுமார் 11 ஆயிரம் பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளது.
பல்வேறு பெருநிறுவனங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இணைந்துள்ளது. மைக்ராசாஃப்ட் சுமார் 11 ஆயிரம் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஜூன் மாத நிலவரங்கள்படி, அந்நிறுவனத்தில் அமெரிக்காவில் 1.22 லட்சம் பணியாளர்கள், மற்ற நாடுகளில் 99 ஆயிரம் பணியாளர்கள் என 2.21 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மொத்த பணியாளர்களில் 5 சதவீதம் அதாவது 11 ஆயிரம் பேரை இன்றே பணியில் இருந்து நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மனித வளம் மற்றும் பொறியாளர் பிரிவுகளில் தான் தற்போது ஆட்குறைப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இதுவரை மைக்ரோசாஃப்ட் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. மைக்ரோசாஃப்டில் கணினி விற்பனை, விண்டோஸ் உள்ளிட்ட சாஃப்ட்வேர் விற்பனை கடந்த சில ஆண்டுகளாகவே சரிவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாகவே ஆட்குறைப்பு செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானும் 18 ஆயிரம் பணியாளர்களை நீக்க உள்ளதாக இம்மாத துவக்கத்தில் தெரிவித்திருந்தது. ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, கடந்த நவம்பரில் 11 ஆயிரம் பணியாளர்களையும், ஆகஸ்ட் மாதம் ஸ்னாப்சாட் நிறுவனம் 20 சதவீத பணியாளர்களையும், முன்னணி சமூகவலைதள நிறுவனமான ட்விட்டர் கடந்த அக்டோபரில் 7,500 பணியாளர்களையும் நீக்கியிருந்தது.