105 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்த கோவை பெண்..!!இவ்வளவு பால் சுரக்குமா?
கோவை வடவள்ளி பி.என் புதூர் பகுதியை சேர்ந்தவர் பைரவ் - ஸ்ரீவித்யா தம்பதியினர். இவர்களுக்கு 4 வயது ஆண் குழந்தை மற்றும் 10 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஸ்ரீவித்யா தனக்கு முதல் குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பால் தானம் செய்ய வேண்டும் என முடிவு செய்து, இது குறித்து தனது கணவர் பைரவிடம் தெரிவித்துள்ளார். அவரும் ஆர்வம் காட்டியதால், தாய்பால் தானம் குறித்து அறிய இணையதளத்தில் தேடி உள்ளனர்.
பின்னர் மகப்பேறு மருத்துவர்கள் உதவியுடன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அமிர்தம் தாய்ப்பால் தானம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தனது இரண்டாவது பெண் குழந்தை பிறந்த ஐந்தாவது நாளில் இருந்து தாய்ப்பால் தானம் செய்து வருகிறார். இவர் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து ஏசியா புக் ஆப் சாதனையும் படைத்துள்ளார்.
இவ்வளவு தாய்ப்பாலை தானம் செய்ய அவரால் எப்படி முடிந்தது? இவ்வளவு அதிகளவில் தாய்ப்பால் தானம் செய்யலாமா?
ஸ்ரீவித்யா 'ஹைப்பர் லேக்டேடிங்' (Hyper lactating condition) என்று சொல்லப்படும் அதிகமாகப் பால் சுரக்கும் நிலை கொண்ட தாயாக இருந்தார். இதனால் அவர் தனது குழந்தைக்கு கொடுத்தது போக, மீதம் சுரந்த பாலை சேகரித்து தானமாக கொடுத்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
''என்னுடைய குழந்தைக்குப் பாலூட்டிய பின்னர், நான் மெஷின் வைத்து பம்ப் செய்து அதிகமாகச் சுரந்த பாலை சேகரித்தேன். அதிகமாக சுரக்கும் தாய்ப் பாலை குழந்தைக்கு புகட்டாமல் இருப்பது தவறு என்றும் அவ்வப்போது வெளியேற்றினால்தான் மீண்டும் பால் சுரக்கும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறினர்.
அதுவே தாய்ப்பாலை தானம் செய்வதற்கு எனக்கு ஊக்கம் அளித்தது. நான் சரிவிகித உணவை எடுத்துக்கொள்கிறேன், என் பெற்றோர் மற்றும் கணவர் உதவியால்தான் நான் தொடர்ந்து தாய்ப்பால் தானம் செய்தேன். என் குடும்பத்தார் அளித்த ஊக்கம்தான் எனக்கு உதவியது,'' என்கிறார் அவர். அதிகமாக சுரக்கும் பாலை எப்படி எடுப்பது, சேகரிப்பது என்பது குறித்து மருத்துவர்களிடம் பலமுறை கேட்டு விளக்கம் பெற்றதாக கூறுகிறார் ஸ்ரீவித்யா.