விஷ சாராயம் அருந்திய 10 பேர் அடுத்தடுத்து பலி: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு..!
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் சிலர் கும்பலாகச் சென்று விஷ சாராயம் அருந்தி இருக்கிறார்கள். இதில் 6 பேர் உடல்நிலை பாதிப்புக்கு ஆளானதாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் கணேசன் மகன் பிரவீன்(29), தர்மன் மகன் சுரேஷ் (46), சேகர், ஜெகதீசன் ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோரில் 4 பேர் அடுத்தடுத்து உயிரிழக்க பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சையில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே, விஷ சாராயம் அருந்தி 10 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவலை மறுத்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், “உயிரிழந்தவர்களுக்கு வெவ்வேறு உடல்நல பாதிப்பு இருந்துள்ளது. அதனால் தான் அவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சமய்சிங்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே விஷ சாராயம் குடித்து 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உண்மை தன்மை குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் கூறுகையில், கள்ளக்குறிச்சியில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உண்மை தன்மை குறித்து மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகின்றனர். வயிற்றுப் போக்கு, வலிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கலெக்டர் கூறியிருக்கிறார். உடற்கூராய்வு முடிந்து அறிக்கை கிடைக்க பெற்ற பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும். இதுபோன்ற செய்திகளை மக்கள் நம்பி அச்சம் அடைய வேண்டாம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. என்று கூறினார். இந்நிலையில், 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.