மனிதநேய தலைவர் கேப்டன் விஜயகாந்த் வாழ்க்கையின் 10 முக்கிய அம்சங்கள்..!
சினிமா வாய்ப்பு இவருக்கு பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தான் கிடைத்தது. அவரது முதல் படம், 1979-ஆம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான 'இனிக்கும் இளமை'. அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய திரைப்படம் 'சட்டம் ஒரு இருட்டறை'. இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறினார். 'புலன் விசாரணை', 'சேதுபதி ஐபிஎஸ்', 'சத்ரியன்', 'கேப்டன் பிரபாகரன்','வானத்தைப் போல', 'தவசி', 'ரமணா' என இதுவரை 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் விஜயகாந்த்.
"தனது சினிமா வாழ்க்கையில் 54 புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்தவர் நடிகர் விஜயகாந்த். உலக சினிமாவில் இதை வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள். அதிகமான புதிய தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்"
"சொல்வதெல்லாம் உண்மை திரைப்படம் மூலம் என்னை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியது அவர் தான். இந்த காட்சி எதற்கு, வசனம் எதற்கு, கதையை இப்படி மாற்றலாமா என்றெல்லாம் அவர் பேசமாட்டார். கதையை ஒத்துக்கொண்டு, சம்பளம் வாங்கிவிட்டால் எதையும் பேசாமல், விரைவாக நடித்துக் கொடுத்து விடுவார். மிகச்சிறந்த மனிதர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல தொழில்முறைக் கலைஞர் விஜயகாந்த்" என்று கூறினார் தயாரிப்பாளர் டி. சிவா.
பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் உடனான இவரது கூட்டணி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 1986ஆம் ஆண்டு வெளியான ஊமை விழிகள் எனும் திரைப்படத்தில், அப்போதைய நடிகர்கள் பலரும் நடிக்கத் தயங்கிய டி.எஸ்.பி தீனதயாளன் என்ற காவல்துறை அதிகாரி வேடத்தில் திரையில் தோன்றினார் நடிகர் விஜயகாந்த்.
தனது இமேஜ் பற்றிக் கவலைப்படாமல், சற்று வயதான வேடத்தில் இந்த படத்தில் அவர் நடித்திருப்பார். இந்த அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.
தொடர்ந்து திரைப்பட கல்லூரியிலிருந்து வந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி உழவன் மகன், செந்தூரப் பூவே, காவியத் தலைவன் போன்ற திரைப்படங்களைக் கொடுத்தார்.
நடிகர் விஜயகாந்தின் திரைப்படங்களில் அதிகம் பேசப்படுவது அவரது சண்டைக்காட்சிகளே. பல திரைப்படங்களில் தனக்கு டூப் வேண்டாம் என மறுத்து, சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளில் தனெக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியிருந்தார் விஜயகாந்த.
இதற்கு பின்னால் ஒரு முக்கிய சம்பவம் உள்ளது என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். 'நாளை உனது நாள்' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில், அவருக்கு டூப் போட்ட ஒரு ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு, இனிமேல் எனக்கான சண்டைக்காட்சிகளில் நானே நடித்துக் கொள்கிறேன், டூப் வேண்டாமென முடிவெடுத்துள்ளார்.
இதற்காக பிரத்யேக சண்டைப் பயிற்சிகளையும் அவர் எடுத்துள்ளார். தனது பெரும்பாலான படங்களில் டூப் போடாமல் நடித்ததால், பலமுறை இவருக்கு தோள்பட்டை இறக்கம் ஏற்பட்டுள்ளது.
1984ஆம் ஆண்டு, விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஆண்டு. அந்த ஒரே ஆண்டில் மட்டும் விஜயகாந்த நடித்த 18 திரைப்படங்கள் வெளியாகின. மிகச்சில நடிகர்களுக்கு இந்த சாதனை உள்ளது.
கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் என்ற தலைமுறை உருவான போது, அதற்கு இணையாக தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் விஜயகாந்த். தனது பல படங்களில் நீண்ட உணர்ச்சிபூர்வமான வசனங்களை, தன்னுடைய பாணியில் ஒரே டேக்கில் பேசி முடிப்பவர் விஜயகாந்த்.
"கிராமங்களில் இவரது படங்கள் வெளியாகும் தினத்தன்று திருவிழாவுக்கு செல்வது போல கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் வண்டி கட்டிக்கொண்டு படம் பார்க்கச் செல்வோம்", என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ரசிகர் அறிவுமணி.
கமல், ரஜினி, சத்யராஜ், பிரபு, கார்த்திக் என அப்போது இருந்த முன்னணி நடிகர்களுக்கு கூட 'நூறாவது படம்' என்றாலே தோல்வி தான். ஆனால் நடிகர் விஜயகாந்திற்கு நூறாவது படமான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
1991ஆம் ஆண்டு, ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் வெள்ளிவிழா கொண்டாடியது. அந்த திரைப்படத்திற்கு பிறகு சினிமா துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் கேப்டன் என்றே அழைக்கப்பட்டார்.
விஜயகாந்த் 1999-ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவரானார். அவர் நடிகர் சங்கத் தலைவரானபோது, நடிகர் சங்கம் மிகப் பெரும் கடன் சுமையில் இருந்தது.
அதனை வெளி நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் கடன்களை அடைத்தார். அதோடு மட்டுமல்லாமல், நலிந்த கலைஞர்களுக்கு, உதவி செய்வதற்காக ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.
2002-ஆம் ஆண்டு காவிரி நதி நீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து “நீர் தராத கர்நாடகாவுக்கு மின்சாரம் இல்லை” என்ற போராட்டத்தை நெல்லையில் நடத்தினார்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 1993இல் வெளியான திரைப்படம் 'செந்தூரப் பாண்டி'. இந்த படத்தில் விஜய்க்கு அண்ணனாக, கவுரவ வேடத்தில் தோன்றியிருப்பர் நடிகர் விஜயகாந்த்.
இதேபோல 1999இல் 'பெரியண்ணா' என்ற திரைப்படம், அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த சூர்யா நடித்த திரைப்படம். அதிலும் ஒரு கவுரவ வேடத்தில் தோன்றியிருப்பர் நடிகர் விஜயகாந்த்.
"சூர்யா நடிப்பில் வந்த மாயாவி திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்திற்காக அவரிடம் பேசியபோது, உடனே ஒத்துக்கொண்டார். பொதுவாக அவரைப் போன்ற பெரிய நடிகர்கள் அவ்வளவு எளிதாக நடிக்க ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அடுத்த நாளே, ஏவிஎம் ஸ்டூடியோவில் தான் நடித்துக் கொண்டிருந்த படத்தின் உணவு இடைவெளியில் எங்களுக்கான பகுதியை முடித்து கொடுத்தார்" என மாயாவி திரைப்படத்தின் இயக்குனர் சிங்கம் புலி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
சினிமாவில் பல உச்சங்களைத் தொட்ட விஜயகாந்த் 2005-ஆம் ஆண்டு, செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரையில் மாபெரும் மாநாடை நடத்தி, அதில், ”தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்” என்ற தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு முழு நேர அரசியலில் இறங்கினார்.
விஜயகாந்த் 2006-இல் கட்சி தொடங்கிய பிறகு, ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளை 'வறுமை ஒழிப்பு தினமாக' கடைபிடித்து வந்தார்.
அந்நாளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜயகாந்தின் வழியைப் பின்பற்றி ஏழை, எளிய மக்களுக்கான நலதிட்ட உதவிகளை 'இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே' என்ற முழக்கத்தோடு செய்து வருகின்றனர்.
இன்று அவர் நம்முடன் இல்லை என்றாலும்.. என்றும் அவர் நம் நெஞ்சில் வாழ்த்து கொண்டே தான் இருப்பார்.