1. Home
  2. தமிழ்நாடு

புதிதாக 1 லட்சத்து 1,474 பேருக்கு ஓய்வூதியம்.. ஆணைகளை வழங்கினார் முதல்வர்..!

புதிதாக 1 லட்சத்து 1,474 பேருக்கு ஓய்வூதியம்.. ஆணைகளை வழங்கினார் முதல்வர்..!


1,01,474 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று 10 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும், இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் ஓய்வூதிய திட்டம், 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ஆகிய ஓய்வூதிய திட்டங்களின் வாயிலாக இதுநாள் வரை 33,31,263 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டங்களுக்கென 2021-22-ம் ஆண்டிற்கான திருத்திய வரவு - செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.4807.56 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தற்போது, சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் கோரி புதிதாக வரப்பெற்ற விண்ணப்பங்களில், மாநில அளவில் 1,01,474 தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் விதமாக, இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 48,077 பயனாளிகளுக்கும், இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 1,359 பயனாளிகளுக்கும், இந்திராகாந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 4,346 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 14,739 பயனாளிகளுக்கும், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 28,209 பயனாளிகளுக்கும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2,397 பயனாளிகளுக்கும், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்டவர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 1,732 பயனாளிகளுக்கும், 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 554 பயனாளிகளுக்கும், முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 61 பயனாளிகளுக்கும், என மொத்தம் 1,01,474 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று 10 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலர் இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த், சமூக பாதுகாப்புத் திட்ட ஆணையர் வெங்கடாசலம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like