வரும் 9, 12, 13ம் தேதிகளில் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!
மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 9, 12, 13-ம் தேதிகளில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக அரசு கோவையை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி, முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் அதிமுகவினர் கோவையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "10 ஆண்டு கால அதிமுக ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக இருந்தது. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியது அதிமுக அரசு. கோவைக்கு மட்டும் அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்தவகையில், 28 தடுப்பணைகள் கட்டுக்கொடுக்கப்பட்டுள்ளன.
மக்கள் நலன் கருதி அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு ரிப்பன் வெட்டி உரிமை கொண்டாடுகிறது. அதிமுக கொண்டு வந்த கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது. திமுக ஆட்சியில் கோவைக்கு மட்டுமில்லை, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. 18 மாத திமுக ஆட்சியில் தமிழக மக்கள் வேதனையில் உள்ளனர்.
மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும். அந்தவகையில், வருகிற 9-ம் தேதி பேரூராட்சி பகுதிகளிலும், 12-ம் தேதி அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும். அதேபோன்று வருகிற 13-ம் தேதி நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பொங்கல் பரிசு தருவதற்கு முதல்வர் தடுமாறி வருகிறார். கடந்த பொங்கலுக்கு கொடுத்த வெல்லம் தரமற்றதாக இருந்ததது. இது மக்களுக்கு தெரியும். பொங்கல் தொகுப்பில் இருந்த அரிசியில் பூச்சி, பல்லி இருந்தது. திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் முறைகேடு நடந்துள்ளது. சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. இவ்வாறு ஏழை - எளிய மக்களுக்கு வழங்கக் கூடிய பொருட்களில் கூட ஊழல் செய்து வருகிறார்கள்: என்று அவர் கூறினார்.