குடிகார தந்தை மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த 8 வயது மகன்!!
உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் காசியா பஜார் பகுதியைச் சேர்ந்த ஆரியன் மவுரியா (8) என்ற சிறுவன் காவல்நிலையத்திற்கு சென்று தனது தந்தை குறித்து புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை அதிகாரி ஒருவர் சிறுவனிடம் புகார் அளிக்க வந்ததற்காக காரணத்தை கேட்டுள்ளார். அப்போது சிறுவன், தந்தை மீது புகார் கொடுக்க வந்ததாக கூறியதை கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுவனின் தந்தை தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து வீட்டில் சண்டை போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த சிறுவன் தனது தந்தை குடிக்காமல் இருக்க மதுக்கடைகளை மூட வேண்டும் என கூறியுள்ளார்.
போலீஸார் சிறுவனின் தந்தையைக் காவல்நிலையத்திற்கு அழைத்து இனி குடிக்கக் கூடாது என உறுதிமொழி வாங்கிக் கொண்டு எச்சரிக்கை செய்து அனுப்பினர். சிறுவனின் நல்ல குணத்தைப் பார்த்த அசுதோஷ் குமார் திவாரி என்ற காவல் அதிகாரி அவரது கல்வி செலவை ஏற்க முன்வந்துள்ளார்.
newstm.in