1. Home
  2. தமிழ்நாடு

பாதியில் நின்றது மருத்துவமனை லிஃப்ட்.. சிக்கிய 8 பேர் ஒரு மணி நேரத்திற்கு பின் மீட்பு..!

பாதியில் நின்றது மருத்துவமனை லிஃப்ட்.. சிக்கிய 8 பேர் ஒரு மணி நேரத்திற்கு பின் மீட்பு..!

சென்னையில், தனியார் கண் மருத்துவமனை ‘லிஃப்ட்’டில் சிக்கித் தவித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

சென்னை, ஆவடி காமராஜ் நகர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான கண் மருத்துவமனை அமைந்துள்ளது. நேற்று காலை இந்த மருத்துவமனையில் கண் சிகிச்சை பெறுவதற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள் 3 ஆண்கள் என மொத்தம் 8 பேர் வந்தனர். சிகிச்சை முடிந்து மதியம் 2 மணிக்கு முதல் தளத்தில் இருந்து தரை தளத்துக்கு லிஃப்ட் வழியாக கீழே இறங்க முயன்றனர்.


அப்போது, திடீரென 'லிஃப்ட்' பழுதாகி பாதியில் நின்றது. இதனால் அவர்கள் 8 பேரும் 'லிஃப்ட்டு'க்குள் சிக்கிக்கொண்டனர். சிறிய அளவிலான அந்த 'லிஃப்டில்' குறைந்தது 5 பேர்தான் செல்லமுடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் அது தெரியாமல் கூடுதலாக 3 பேர் ஏறி பயணித்ததால் 'லிஃப்ட்' இடையில் பழுதாகி நின்று விட்டதாக தெரிகிறது.

'லிஃப்டில்' மாட்டிக்கொண்ட 8 பேரும் பயத்தில் கூச்சலிட்டனர். உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி 'லிஃப்டில்' சிக்கித் தவித்த 8 பேரையும் ஒருவர் பின் ஒருவராக பத்திரமாக மீட்டனர்.

Trending News

Latest News

You May Like