கொடூரம்..!! மானை வேட்டையாட சுட்டதில் 30 வயது கர்ப்பிணி பெண் வயிற்றில் பாயந்த குண்டு...!!
உத்தரபிரதேச மாநிலம் மஹோபா பகுதியில் வசித்து வருபவர் பூபேந்திர சிங். இவரது மனைவி வந்தனா (30). கர்ப்பிணிப் பெண்ணான இவர் தனது கணவருடன் சேர்ந்து வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் இருவர் புளூபக் வகை மானை வேட்டையாட வந்துள்ளனர். அவர் புளூபக் மானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆனால் அது தவறுதலாக வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணின் வயிற்றில் சுடப்பட்டது.
உடனடியாக அவர் சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக ஜான்சியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். தற்போது அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் குறித்து வந்தனாவின் கணவர் பூபேந்திர சிங் ராஜ்புத் கூறுகையில், தனது மனைவியுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ஒரு புளூபக் வேட்டையாட அருகில் வந்த இருவர் மனைவியின் வயிற்றில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் தன் மனைவியை நோக்கி விரைந்ததாகவும், அப்போது அவள் மூச்சுத் திணறிக்கொண்டிருந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் என்று கூறினார். இதற்கிடையில், புளூபக் வேட்டையா வந்த இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர் என்றார்.
மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் அளித்த அறிக்கையில், வந்தனா மற்றும் அவரது கருவில் இருக்கும் குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.