மின் ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு!!
மின் ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜூலை 1 முதல் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதன்படி, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால், தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், மின்சார வாரிய தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் திருத்தப்பட்ட அகவிலைப்படியானது அடிப்படை ஊதியத்தில் 31 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஜூலை 1 முதல் அகவிலைப்படியானது அடிப்படை ஊதியத்தில் 34 சதவீதம் வழங்கப்பட உள்ளது.
அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அகவிலைப்படியானது கடந்த ஜூலை 1 முதல் ஆகஸ்டு 30 வரை கணக்கிடப்பட்டு 2 மாதத்திற்கான நிலுவைத்தொகை உடனடியாக வழங்கப்படும்.
செப்டம்பர் மாதத்திற்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படி இம்மாதத்தின் ஊதியத்துடன் இணைத்து அக்டோபர் மாதம் பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை (இ.சி.எஸ்.) மூலம் வழங்கப்படும்.
திருத்தப்பட்ட அகவிலைப்படியானது தற்போது அகவிலைப்படி பெறும் முழுநேர பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் மற்றும் திருத்தப்பட்ட ஊதிய விகிதம் ரூ.4 ஆயிரத்து 100 முதல் ரூ.12 ஆயிரத்து 500 பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும்.
newstm.in