இலவச நாப்கின் திட்டத்திற்கு ரூ.200 கோடி... இந்தியாவில் முதல்முறை!!
பெண்களுக்கும், பள்ளி மாணவிகளுக்கும் இலவச நாப்கின் வழங்க 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக ராஜஸ்தான் மாநில அமைச்சர் மம்தா பூபேஷ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசு , 'அயாம் சக்தி உடான்' எனும் திட்டத்தைக் கடந்த ஆண்டு கொண்டுவந்தது. இந்தத் திட்டத்தின்கீழ் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் படிப்படியாகக் கொண்டுவரப்படுகின்றன.
அதன்படி, 1.20 கோடி பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் எனக் கடந்த ஆண்டு ராஜஸ்தான் அரசு அறிவித்தது. முதற்கட்டமாக இலவச நாப்கின்களும் வழங்கப்பட்டன.
இந்நிலையில், 2022-23 பட்ஜெட்டில், இந்தத் திட்டத்துக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக அம்மாநில அமைச்சர் மம்தா பூபேஷ் கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டில், ராஜஸ்தானின் 31 மாவட்டங்களைச் சேர்ந்த 26,220 பள்ளிகள், 23 மாவட்டங்களில் உள்ள 31,255 அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றுக்கு 104.78 கோடி ரூபாய் மதிப்பில் இலவச நாப்கின்கள் வழங்கப்பட்டதாகக் மம்தா பூபேஷ் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு 33 மாவட்டங்களில் உள்ள 60,361 அங்கன்வாடி மையங்கள் மூலம் 1.15 கோடி பயனாளர்களுக்கும், 34,104 அரசுப் பள்ளிகளில் படிக்கும் 26.48 லட்சம் மாணவிகளுக்கும் இலவச நாப்கின் வழங்குவதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படியான ஒரு திட்டத்துக்கு இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்பட்டதில்லை, இதுவே முதன்முறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
newstm.in