மக்களுக்கான தீபாவளி பரிசு - இனி ஆண்டுக்கு 2 கேஸ் சிலிண்டர்கள் 'இலவசம்'..!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு இரண்டு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 38 லட்சம் பேர் பயனடைவார்கள்.
குஜராத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் குஜராத்தில் ஆட்சி செய்து வரும் பூபேந்திர பட்டேல் தலைமையிலான பா.ஜ.க. அரசு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா 2 இலவச எரிவாயு சிலிண்டர் வழங்க முடிவு செய்துள்ளது.
மேலும், சிஎன்ஜி மற்றும் பைப்டு நேச்சுரல் கேஸ் ஆகியவற்றின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரி அல்லது வாட் வரியை 10 சதவீதம் குறைக்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்தது. இதனால் சிஎன்ஜியை ஒரு கிலோவுக்கு ரூ. 7 குறைய வாய்ப்புள்ளது. இதன்மூலம் 14 லட்சம் வாகன் உரிமையாளர்கள் பயன்பெறுவர்.
வாட் வரி குறைப்பால் அரசுக்கு ரூ.1,650 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் இது குஜராத் மக்களுக்கான தீபாவளி பரிசு என மாநில கல்வி அமைச்சரும், குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளருமான ஜிது வகானி தெரிவித்துள்ளார்.