1. Home
  2. தமிழ்நாடு

யூ-டியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு.. 17 வயது சிறுவன் கைது..!

யூ-டியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு.. 17 வயது சிறுவன் கைது..!

தாய் குறித்து தவறாக பேசிய நண்பனை மிரட்ட யூ-டியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, லாஸ்பேட்டை பாரதிதாசன் வீதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (50). சண்டே மார்க்கெட் வியாபாரியன இவருக்கு, மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதி இவருடைய வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது.

இதுகுறித்து லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பரமசிவத்தின் 2வது மகன் விக்கிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது.


இதன் அடிப்படையிலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றியும் போலீசார் விசாரித்தனர். அப்போது, லாஸ்பேட்டை நெருப்புக்குழி ராமதாஸ் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் நாட்டு வெடிகுண்டு வீசியது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த சிறுவனை கைது செய்து விசாரித்தனர். அப்போது, பரமசிவம் மகன் விக்கியும், இந்த சிறுவனும் நண்பர்களாக பழகியுள்ளனர். சிறுவனின் தாய் அப்பகுதியில் கட்டிட வேலைக்கு செல்வது வழக்கம். அங்கு, கட்டிட கான்ட்ராக்டர் ஒருவருக்கும், சிறுவனின் தாய்க்கும் தவறான உறவு இருப்பதாக, விக்கி தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.

இதையறிந்த சிறுவன், விக்கியை தட்டிக் கேட்டார். பின்னர், அவரை மிரட்ட முடிவு செய்து, நாட்டு வெடிகுண்டு தயாரித்து பரமசிவம் வீட்டு மீது வீச முடிவு செய்துள்ளார். இதற்காக அந்த சிறுவன், 'வெடிகுண்டு தயாரிப்பது எப்படி..?' என்ற வீடியோவை யூ டியூப்-பில் பார்த்துள்ளார்.


இதையடுத்து, வீட்டில் கடந்த ஆண்டு தீபாவளியின் போது வாங்கிய பட்டாசுகள் மற்றும் அரியாங்குப்பத்தில் இருந்து வெடி மருந்துகளை அவர் வாங்கியுள்ளார். பின், லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நாட்டு வெடிகுண்டு தயார் செய்து எடுத்துச் சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த சிறுவன், சீர்திருத்த பள்ளியில் ஒப்படைக்கப் பட்டார்.

Trending News

Latest News

You May Like

News Hub