பாஜக பிரமுகர் கொலை.. துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம்.. என்.ஐ.ஏ. அறிவிப்பு..!
தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடந்த பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் நெட்டார் (31). பாஜக பிரமுகரான இவர் கோழி இறைச்சிக்கடை நடத்தி வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ம் தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல், சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், இச்சம்பவத்தில் கைதான சிலருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் பண்ட்வால் தாலுகா கோடஜேயட்டா பகுதியைச் சேர்ந்த முகமது செரீப் (53), மசூத் (40) ஆகிய 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தேடிவருகிறார்கள். அவர்கள் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பெங்களூருவுக்கு சென்று அதிகாரிகள் தேடினர். இந்த நிலையில் அவர்களைப் பிடிக்க துப்பு கொடுப்போருக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களைப் பிடிக்க துப்பு கொடுப்போரின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அவர்களைப் பற்றிய தகவல்களை பெங்களூரு டொம்லூரில் உள்ள சர்.எம்.விஸ்வேசுவரய்யா கேந்திரய பவனில் இயங்கி வரும் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நேரிலோ அல்லது 080-29510900 என்ற தொலைபேசி எண்ணிலோ, 89042-41100 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டோ தெரிவிக்கலாம் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.