1. Home
  2. தமிழ்நாடு

கரையை கடந்தது மாண்டஸ்.. மழை மற்றும் சேத விவரங்கள்..!

கரையை கடந்தது மாண்டஸ்.. மழை மற்றும் சேத விவரங்கள்..!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3 மணியளவில் முற்றிலுமாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும் கடல் சீற்றத்துடனேயே காணப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், உள் மாவட்டங்களில் இன்னும் இரு தினங்களுக்கு மழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9.30 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாண்டஸ் புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மதியம் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக காஞ்சிபுரத்தில் 18 செ.மீ., குன்றத்தூரில் 15 செ.மீ மற்றும் உத்திரமேரூரில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மின்னல், பணப்பாக்கத்தில் 20 செ.மீ. மழை பதிவானது.

நேற்றிரவு 9.30 மணியளவில் மாண்டஸ் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. அதிகாலை 3 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது 75 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு உடனடியாக மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.


மாண்டஸ் புயல் எதிரொலியாக தலைநகர் சென்னையில் சுமார் 400 மரங்கள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மாண்டஸ் புயலை மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் அரசு சிறப்பாக எதிர்கொண்டது. சென்னையில் 400 மரங்கள் விழுந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் மழை நீர் தேங்கவில்லை. 16 சுரங்கப் பாதைகளும் பயன்பாட்டில் உள்ளன. சைதாப்பேட்டையில் வீடு இடிந்துவிழுந்த நிகழ்வில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர். அதுதவிர தலைநகரில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை" என்றார்.

Trending News

Latest News

You May Like