தஞ்சையில் ஜாதிய பாகுபாடு.. முடி வெட்ட மறுத்து கடையை மூடிச் சென்றவர் கைது..!
ஒரத்தநாடு அருகே, பட்டியல் இன மக்களுக்கு முடி திருத்தம் செய்ய மறுத்து கடையை மூடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் கிளாமங்கலம் கிராமத்தில், டீக்கடைகளில் இரட்டை குவளை முறையும், முடி திருத்தும் கடையில் ஒரு தரப்பு மக்களுக்கு முடித் திருத்தம் செய்யாமலும் பல ஆண்டுகளாக தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக பாப்பாநாடு காவல்துறையினர் கிளாமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆறு பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஊர் கட்டுப்பாட்டை காரணம் கூறி, பட்டியல் இன மக்களுக்கு முடி திருத்தம் செய்ய மறுத்து கடையை மூடிச் சென்ற வீரமுத்து என்பவரை பாப்பாநாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.