ஒருவரை மிரட்டி பணம் வாங்க எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..!!
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் நிஷாத். இவரது மனைவி ரஷிதா. இந்த தம்பதியினர் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில் யூடியூபில் வீடியோக்கள் போட்டு வருமானம் பார்க்கலாம் என முயற்சித்துள்ளனர். ஆனால், இவர்களுடைய வீடியோக்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்காததால், பணம் சம்பாதிக்க யோசித்து இருவரும் பக்காவாக பிளான் போட்டு ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து வயதான வசதியான ஆட்களை தேட துவங்கி உள்ளனர்.
அந்த வகையில் மலப்புரம் கல்பாகம்சேரி பகுதியைச் சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவருடன் ரஷிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் ரஷிதா நெருங்கி பழகியதோடு, அந்த முதியவரை தன் வீட்டிற்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் எனவும் ஆசைவார்த்தை கூறினார். ரஷிதாவின் ஆசைவார்த்தையில் மயங்கிய முதியவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷிதா வீட்டிற்கு சென்றார்.
பின்பு கணவரின் உதவியுடன் முதியவருடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனை கணவரும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தொடர்ந்து தனது கணவருக்கு தொழில் தொடங்க வேண்டும் என அவ்வப்போது முதியவரிடம் பணம் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த முதியவர் பணத்தை தர மறுத்துள்ளார். இதனால் இருவரும் எடுத்து வைத்திருந்த வீடியோவை காட்டி மிரட்டி ஒரு வருடத்திற்குள் முதியவரிடம் இருந்து ரூ.27 லட்சம் வரை பறித்துள்ளனர்.
இந்த பணத்தை வைத்து தம்பதியினர் இருவரும் ஒரு கார் வாங்கி நாடு நாடாக சுற்றித்திரிந்து அதனை வீடியோ எடுத்து 'மலாய் மல்லுஸ்' என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். இதனை தொடர்ந்து அவர்களது யூடியூப் ஃபாலோயர்கள் அதிகமானதால் முதியவரை தொடர்ச்சியாக மிரட்டி பணம் வசூலித்து வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளனர். இருவருக்கும் சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இந்த வீடியோக்களை அவர்களது யூடியூப்பில் பதிவிட்டுள்ளனர். நாட்கள் செல்ல செல்ல பணம் குறைந்து வருவது குறித்து முதியவரின் உறவினர்கள், அவரிடம் கேட்டுள்ளனர்.
இதையடுத்து முதியவரும் நடந்த சம்பவத்தை அவர்களிடம் எடுத்துரைத்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 6 மாத கைக்குழந்தைகள் இருப்பதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், ரஷிதாவுக்கு மட்டும் முன்ஜாமீன் வழங்கி, நிஷாத்தை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.