வீடு திரும்பினார் கமல்ஹாசன்: ஓய்வில் இருக்க அறிவுறுத்தல்..!
காய்ச்சல் காரணமாக சென்னை போரூரில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் இன்று வீடு திரும்பினார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மூன்று நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்றார். அங்கு, இயக்குநர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும், சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று முன் தினம் மதியம் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன் நலமாக உள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் இன்று வீடு திரும்பினார். மேலும், வீட்டிலேயே அவர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.