கதை நாயகனாக களம் இறங்குகிறார் கவுண்டமணி..!
நீண்ட இடைவெளிக்கு பிறகு, புதிய படம் ஒன்றில் கதையின் நாயகனாக நடிக்க கவுண்டமணி சம்மதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் 40 வருடங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்தவர் கவுண்டமணி. இவர், அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இவரும், செந்திலும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.
ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு கவுண்டமணி ஒதுங்கினார். சில வருடங்களுக்கு முன்பு '49ஓ', 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' என்ற படங்களில் மட்டும் நடித்து இருந்தார். அதன் பிறகு, உடல் நல குறைபாடு காரணமாக அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் கவுண்டமணியை நேரில் சந்தித்தார். அப்போது, தனது படத்தில் நடிக்கும்படி கேட்டதாகவும், அதற்கு கவுண்டமணி சம்மதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படம் ஒன்றில் கதையின் நாயகனாக நடிக்க கவுண்டமணி சம்மதம் தெரிவித்துள்ளார்.
மதுரை செல்வம் தயாரிக்கும் இந்த படத்துக்கு 'பழனிச்சாமி வாத்தியார்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 'பேயை காணோம்' படத்தை இயக்கி பிரபலமான அன்பரசன் இந்தப் படத்தை இயக்குநராக பணிபுரிகிறார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவர் என கூறப்படுகிறது.