தயாரா இருங்க.. மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு அறிவுறுத்தல்..!
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால், தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகர ஆணையருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.