மாரடைப்பால் மயங்கிய முதியவர்: உயிர் காத்த சி.எஸ்.ஐ.எஃப் வீரர்கள்..!

மேற்கு வங்க மாநிலம் துர்காபூரை சேர்ந்தவர் சேகர் ஹஸ்ரா (69). இருதய நோயாளியான இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று முன்தினம் இரவு சுமார் 12 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தார்.
அப்போது, விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் இருந்து வெளியே செல்லும் போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதைக் கண்ட சி.எஸ்.ஐ.எஃப் வீரர்கள், தங்களுடைய மேல் அதிகாரிகளுக்கும், விமான நிலைய மருத்துவர்களுக்கும் தகவல் அளித்தனர்.
Also Read - அதிமுக முக்கிய நிர்வாகி ராஜினாமா..!
விரைந்து வந்த மருத்துவர்கள் அவருக்கு இருதய துடிப்பை மீண்டும் உயிர்த்தெழ செய்யும் சி.பி.ஆர். சிகிச்சை அளித்தனர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இருதய துடிப்பும் வெகுவாக குறைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
ஆனால், அங்கு இருந்த சி.எஸ்.ஐ.எஃப் அதிகாரிகள் எட்வின் சாம், வைகுண்டம் ஆகியோர் அந்த பயணியை காப்பாற்ற தொடர்ந்து அவருக்கு சி.பி.ஆர் சிகிச்சை அளித்தனர். இதில் அவருக்கு மீண்டும் சுய நினைவு திரும்பியது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது அவருடைய உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனக்கு சி.பி.ஆர் சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றிய சி.எஸ்.ஐ.எஃப் அதிகாரிகளுக்கு சேகர் ஹஸ்ரா நன்றி தெரிவித்தார். அதுமட்டுமின்றி துரிதமாக செயல்பட்டு பயணி உயிரைக் காப்பாற்றிய சி.எஸ்.ஐ.எஃப் வீரர்களை ஐ.ஜி ஸ்ரீராம் உட்பட மேலதிகாரிகள் பாராட்டினர்.