திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது - அண்ணாமலை..!!
நேற்று இரவு கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது. அப்போது கட்சி பிரமுகர்கள் சிலர் தரைத்தளத்திற்கு முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த பாட்டிலை தூக்கி, கட்சி அலுவலகத்தை நோக்கி வீசிவிட்டு வேகமாக தப்பிச் சென்றனர். பாஜக அலுவலகத்திற்கு அருகே உள்ள மின்கம்பம் மீது விழுந்தது இந்த பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை, இதனால் யாருக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.
பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் காரைக்குடியில் இருக்கும் அவர் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கோயம்புத்தூர் பா.ஜனதா அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர, சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். இது போன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை தி.மு.க. அரசு உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.