கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை கௌரவித்த பிரதமர் மோடி..!!

இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடம் 96 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், சுமார் 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
முன்னதாக நாடாளுமன்ற கட்டடத்திற்குள் வருகை தந்த பிரதமர் மோடியை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உற்சாகமாக வரவேற்றார். தொடர்ந்து பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

இந்த விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த 20 ஆதினங்கள் பங்கேற்றுள்ளனர். யாக வேள்வி வளர்த்து கணபதி ஹோமத்தோடு இந்த பூஜை நடைபெற்றது. பூஜையில் செங்கோல் வைத்து பூஜிக்கப்பட்டது. பூஜை முடிந்த பிறகு 20 ஆதினங்கள் காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசி பெற்றார். இதையடுத்து, ஆதினங்களிடம் இருந்து செங்கோலை பெற்று கொண்டு நாடாளுமன்ற வளாகத்திற்குள் சென்றார்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் பிரதமர் மோடி கௌரவித்தார். கட்டுமானப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி பிரதமர் மோடி கௌரவித்தார். அதனை தொடர்ந்து வந்தே மாதரம் பாடலை நாதஸ்வரத்தில் இசைத்த கலைஞர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறினார்.