பர்த் டே பார்ட்டியில் அடித்து விளையாடியதால் சுயநினைவை இழந்த மாணவர்!!
பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நண்பர் தாக்கியதில் மருத்துவ மாணவர் ஒருவர் சுயநினைவை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த சபீக் அகமது என்ற மாணவர் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 10ஆம் தேதி சபீக் அகமது தனது பிறந்த நாளை கல்லூரி விடுதியில் நண்பர்களுடன் கொண்டாடினார்.
அப்போது சபீக் அகமதுவின் நண்பர்கள் சிலர் விளையாட்டாக அவரை கீழே தள்ளிவிட்டு, ஒருவர் பின் ஒருவராக சபீக் அகமது மீது விழுந்துள்ளனர். அப்போது சபீக் திடீரென மயக்கம் அடைந்தார்.
பதற்றமடைந்த நண்பர்கள் அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த போது, சபீக் அகமதுவின் கழுத்துப் பகுதியிலிருந்து மூளைக்குச் செல்லும் முக்கிய நரம்பில் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் சுயநினைவை இழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
மருத்துவக் கல்லூரி நிர்வாகம் நடத்திய விசாரணையில், 4 மாணவர்கள் 3 மாதங்களுக்கு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in