சென்னை மக்களுக்கு குட் நியூஸ்..!! இனி டிராஃபிக் தொல்லை இல்லை..!!
சென்னையில் தற்போது உள்ள சிக்னல் கம்பங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப, போக்குவரத்து போலீசாரால் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு சிக்னலிற்கும் அடுத்த சிக்னலிற்கும் தொடர்பில்லாமல் உள்ளது. ஒரு சிக்னலில் நிற்கும் வாகனம் அடுத்தடுத்த சிக்னலிலும் நிற்கிறது. இதற்கு தீர்வு காண, சென்னை போக்குவரத்து தகவல் மேலாண்மை பிரிவில், ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் இயங்கும் சிக்னல்கள் 165 போக்குவரத்து சந்திப்புகளில் அமைக்கப்பட உள்ளது.
இந்த சிக்னல் கம்பங்கள், அதிக வாகன நெரிசல் உள்ள வழித்தடத்திற்கு அதிகமான நேரத்தில் பச்சை சிக்னலும், குறைவான வாகன நெரிசல் உள்ள வழிதடத்திற்கு குறைவான நேரத்தில் பச்சை சிக்னலும் வழங்கும். எந்த நேரத்தில் எந்த வழியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது; என்ன மாதிரியான வாகனகள் நெரிசலில் உள்ளன என்ற தகவல் சேமித்து அதற்கு ஏற்ப செயல்படும். அடுத்தடுத்த சிக்னல் கம்பங்களுடன் தொடர்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து சிக்னலில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அதேபோல், ஆம்புலன்ஸ், வி.ஐ.பி., வாகனங்கள் வரும்போது, சிக்னல்கள் தானாகவே பச்சை நிறத்தில் மாறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக சாலை விதிகளை மீறுவோரை ‘ஏஐ’ தொழில்நுட்பம் வாயிலாக கண்காணித்து இணையவழியில் உடனுக்குடன் சட்டப்படி அபராதம் விதித்து சமம்பத்தப்பட்ட வாகன உரிமையாளரின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட உள்ளது. பாலங்கள், விபத்துகள் நடக்கக்கூடிய இடங்கள், போக்குவரத்து அதிகமுள்ள இடங்கள், முக்கிய சந்திப்புகள் போன்ற 58 இடங்களில் கேமராக்கள் வாயிலாக கண்காணித்து கட்டுப்பாட்டு அறைக்கு ‘ஏஐ’ தொழில்நுட்பம் தகவல் தெரிவிக்கும்.
மேலும், சென்னை மாநகரத்தின் போக்குவரத்து அசைவுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்தபடி கண்காணித்து மேலாண்மை செய்யும் வகையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது.
மேலும், 17 இடங்களில் பெரிய அளவிலான டிஜிட்டல் போர்டுகள் அமைக்கப்பட உள்ளன. இதில் எந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. எந்த மாற்று பாதையில் போக்குவரத்து குறைவாக உள்ளது. எந்த பாதையில் எந்த இடத்திற்கு, எவ்வளவு நேரத்தில் செல்லமுடியும் என்ற தகவலை உடனுக்குடன் வாகன ஒட்டிகளுக்கு திரையிட்டு காட்டப்படும்.