குலுங்கிய பாகிஸ்தான்.. அசராமல் செய்தி வாசித்த செய்தி வாசிப்பாளர்!!
துருக்கி நாட்டில் கடந்த மாதம் 6-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அண்டை நாடான சிரியாவிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். அதன்பிறகு தொடர்ந்து பல இடங்களில் ஆங்காங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவிலும் சக்தி குறைந்த நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவிலும் அதிர்ஷ்டவசமாக ஆபத்துகள் ஏற்படவில்லை.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைபகுதியை மையமாக வைத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.8 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இதன் தொடர்ச்சியாக துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக பாகிஸ்தானில் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் மட்டும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளது. அதேபோல் ஆப்கானிஸ்தானில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் நிலநடுக்கத்தின் போதும் தொடர்ச்சியாக டிவி லைவ் நிகழ்ச்சியை தொகுப்பாளர் தொகுத்து வழங்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ளூர் பாஷ்டோ டிவி சேனலான மஹ்ஷ்ரிக் டிவியின் செய்தி தொகுப்பாளர், நிலநடுக்கத்தால் முழு ஸ்டுடியோவும் குலுங்கிய போதும் அமைதியாக செய்தியை தொகுத்து வழங்கி வருகிறார். அவர் செய்தி வழங்கும் போது அந்த செய்தி அறையில் அவருக்குப் பின்னால் உள்ள தொலைக்காட்சித் திரைகள் மற்றும் பிற உபகரணங்கள் வலுவாக அசைவதைக் காணலாம். இந்த வீடியோவை பார்த்த சிலர் செய்தி வாசிப்பாளரை புகழ்ந்தனர். ஆனால் சிலர் அவரை விமர்சித்தும் வருகின்றர்.