சிறந்த கலைச் சேவைக்காக இந்திய வம்சாவளி நடிகைக்கு விருது..!!
அமெரிக்க அரசால் ஒவ்வொரு ஆண்டும் தேசிய மனிதநேய விருது வழங்கப்படுகிறது. சிறந்த கலைஞர்கள், புரவலர்கள் மற்றும் குழுக்களுக்கு இந்த உயரிய விருது வழங்கப்படும். புதிய தலைமுறையினர் மத்தியில் கலையை ஊக்குவிப்பதற்காக முன்மாதிரியாக செயல்பட்ட நபர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.
அதன்படி 2021-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா வெள்ளை மாளிகையில் நடந்தது. புதிய தலைமுறை கதைசொல்லிகளுக்காக பாடுபட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க நடிகையும், தயாரிப்பாளருமான மிண்டி காலிங்கிற்கு (43), இந்த உயரிய விருதை அதிபர் ஜோ பைடன் வழங்கி கௌரவித்தார். அதேபோல் தேசிய மனிதநேய விருதுகளை அதிபர் பைடன், 11 பேருக்கு வழங்கி கௌரவித்தார்.
என்.பி.சி நிறுவனத்தின் ‘தி ஆபீசு’ நாடகத்தில் கெல்லி கபூர் எனும் பாத்திரம் மூலம் பரவலாக அறியப்படுபவர் நடிகை மிண்டி காலிங். இவரது தந்தை கட்டுமான பொறியாளர், தாய் மகப்பேறு மருத்துவர். இவரது பெற்றோர்கள் நைசீரியாவுக்கு வேலை நிமித்தமாக புலம் பெயர்ந்து சென்றவர்கள். பின்னாளில், அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு 1979-ம் ஆண்டு குடி பெயர்ந்தது. இவருக்கு விஜய் என்கிற மூத்த சகோதரர் உள்ளார்.
2005-ல் வெளியான ‘தி 40 இயர் ஓல்ட் வர்ஜின்’ படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின், அன் அகாம்பெய்ன்ட் மைனர்ஸ், லைசென்ஸ் டு வெட், நைட் அட் தி மியூசியம்: பேட்டில் ஆஃப் தி ஸ்மித்சோனியன் உள்ளிட்ட பல படங்களில் குறும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.