சிசோடியா கைது ஏன் தெரியுமா? – பகீர் கிளப்பும் கே.சி.ஆர்!!
மோடி – அதானி பிணைப்பு விவகாரத்தை திசை திருப்பவே டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். முன்னதாக டெல்லி கலால் வரிக் கொள்கை ஊழல் வழக்கு தொடா்பாக சிசோடியா வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
அதனை தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ, அவரை விசாரணைக்கு ஆஜராகக் கோரி இரண்டு முறை சம்மன் அனுப்பியது. அதனைத் தொடர்ந்து சிசோடியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சிபிஐ அனுமதி கோரியது.
இதனையடுத்து, மனீஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இந்நிலையில் சிபிஐ தலைமையகத்தில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாக விசாரணைக்கு ஆஜரான நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்பட்டார். சிபிஐ தரப்பில் விசாரணைக்காக 5 நாள் விசாரணைக் காவல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மார்ச் 4ஆம் தேதி வரை விசாரணை காவல் வழங்கி உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை மோடி – அதானி விவகாரத்தை திசை திருப்பவே என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மணிஷ் சிசோடியா கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி - தொழிலதிபர் அதானி பிணைப்பு பற்றிய பொதுமக்களின் கவனம் திசை திருப்பப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
newstm.in