எனக்கு வீட்டில் நிச்சயம் பண்ணிட்டாங்க... பிரிந்து விடலாம் என கூறியதால் ஏற்பட்ட விபரீதம்..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் பிரதாப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமல் (20). இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ப்ளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவிக்கும் ஓராண்டுக்கு முன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீப காலமாகவே கமலுக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம், சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. தன்னால் வீட்டை மீறி திருமணம் செய்து கொள்ள முடியாது என அந்த பெண் கமலிடம் கூறி வந்துள்ளார். இது கமலுக்கு ஆத்திரமூட்டிய நிலையில், இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி அன்று கமல் அந்த மாணவியை தான் வாடகைக்கு இருக்கும் அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அந்த மாணவி தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டதாகவும், பிரிந்து விடலாம் எனவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கமல் அந்த பெண்ணை அவரது துப்பாட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர், தனது சகோதரர் ரவி என்பவரின் உதவியுடன் உடலை பைக்கில் வைத்து தூக்கிச் சென்று 20 கிமீ தொலைவில் உள்ள அணை கால்வாயில் வீசியுள்ளனர். இதன் பின்னர் அவர் ஊரைவிட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளனர்.
இந்த சம்பவத்தை அறியாத பெண் வீட்டார், பெண் மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவ தினத்தில் கமலுடன் பெண் ஒன்றாக சென்றது தெரியவந்தது. இதனிடையே பெண்ணின் உடலை பிப்ரவரி 1-ம் தேதி கால்வாயில் இருந்து மீட்டனர். அதைத் தொடர்ந்து எட்டு பேர் கொண்ட தனிப்படை நடத்திய தேடுதல் வேட்டையில் வெளியூரில் பதுங்கியிருந்த கமல் மற்றும் அவரது சகோதரர் ரவி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
.png)