குட் நியூஸ்..!! பயன்பாட்டுக்கு வந்த உலகின் முதல் நாசி வழி கொரோனா மருந்து..!!
இந்தியாவில் 3 ஆண்டுகளுக்கும் கூடுதலாக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியானது முதல் மற்றும் 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசியாக எடுத்து கொள்ள வலியுறுத்தப்படுகிறது.
இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் மக்களுக்கு அதிகரிக்கும். ஒருவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும். எனினும், வலியில்லாத தடுப்பூசியாக, நாசி வழியே கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கான முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டது. அதன் பலனாக, இன்கோவேக் எனப்படும் தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு பரிசோதனை கட்டங்களை நிறைவு செய்தது. அதன் தொடர்ச்சியாக அவற்றை, அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ளும் வகையிலான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்றது.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் இன்கோவேக் என்ற நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தின் விலை நிர்ணயத்திற்கு கடந்த டிசம்பர் இறுதியில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக உள்நாட்டில் தயாரான உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து, இந்தியாவில் கடந்த குடியரசு தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்டது.
வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து சந்தையில் இந்த நாசி வழி தடுப்பு மருந்து கிடைக்கப்பெறும் என கூறப்படுகிறது. இதன்படி, நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோசாக இதனை பயன்படுத்த முடியும். இதன் விலை தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.800 என விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.325-க்கு விற்பனை செய்யப்படும். இதன்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பு மருந்துகளை எடுத்து கொள்ளலாம்.
இந்த நிலையில், உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இன்கோவேக் வினியோகம் தொடங்கி விட்டது என பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எல்லா அறிவித்து உள்ளார்.