இனி அரிவாள் வாங்க ஆதார் கார்டை காட்ட வேண்டும்..!!
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் சமீபகாலமாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. தொழில்வளம் நிறைந்த இந்த நகரில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விவகாரம் போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.
விசாரணையில், அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் கட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. சாலையோரங்களில் அல்லது எளிதாக கிடைக்கும் என்பதால் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் கூட அரிவாள்களை வைத்து அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
புனே புறநகர் பகுதிகளில் 'கோட்யா கேங்ஸ்' என்ற கும்பல் அரிவாளை காட்டி பொது மக்களை மிரட்டிய சம்பவங்கள் நடந்தன. வழிப்பறி சம்பவங்களும் நடக்கிறது. மக்கள் பலரும் அரிவாளை காட்டி வழிப்பறியில் ஈடுபடுவதாக புகார் அளித்தனர்.
இந்தநிலையில், அரிவாள் வாங்க ஆதார் கார்டை காட்ட வேண்டும் என புனே போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். இதுதொடர்பாக புனே குற்றப்பிரிவு உதவி கமிஷனர் அமோல் சென்டே கூறுகையில், புனேயில் வேளாண் கருவிகள் விற்பனை செய்யும் கடைகளில் அரிவாள் வாங்கும் நபர்களிடம் இருந்து ஆதார் கார்டு போன்ற ஆவணங்களின் விவரங்களை வாங்க அனைத்து மண்டல துணை கமிஷனர்களுக்கும் உத்தரவிட்டு உள்ளோம்.
சிறார்களுக்கு அரிவாள்களை விற்பனை செய்ய கூடாது எனவும் கூறியுள்ளோம். வாங்கும் நபர் அரிவாளை வேளாண்மை பயன்பாட்டுக்கு தான் வாங்குகிறார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும், என்றார்.