1. Home
  2. தமிழ்நாடு

ஓடும் ரயிலில் பெண் பலாத்காரம்.. டிக்கெட் பரிசோதகர் கைது.. நண்பருக்கு வலை..!

ஓடும் ரயிலில் பெண் பலாத்காரம்.. டிக்கெட் பரிசோதகர் கைது.. நண்பருக்கு வலை..!

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள சந்தவுசி ரயில் நிலையத்தில் 32 வயது பெண் ஒருவர் தனது 2 வயது மகனுடன் ரயிலுக்காக காத்திருந்தார். அவர், பிரயாக்ராஜில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிக்க அவர் டிக்கெட் வாங்கி இருந்தார்.

அந்த நேரம், அப்பெண்ணுக்கு தெரிந்த ராஜு சிங் என்ற டிக்கெட் பரிசோதகர் அங்கு வந்தார். அவர் அப்பெண்ணிடம், “ஏன் தனியாக பொதுப்பெட்டியில் ஏறுகிறாய், அதில் அமர இடம்கூட கிடைக்காது. என்னுடன் வா, ஏசி பெட்டியில் இடம் ஏற்பாடு செய்து தருகிறேன்” என்று கூறி. ஏசி பெட்டிக்கு அழைத்துச் சென்றார். அந்த டிக்கெட் பரிசோதகரை அப்பெண்ணுக்கு நான்கு ஆண்டுகளாக தெரியும். எனவே அவர் அழைத்ததால் அவருடன் சென்றார்.


சிறிது நேரத்தில் ராஜு சிங்கும் அவரது மற்றொரு நண்பரும் அங்கு வந்து, தங்களிடமிருந்த தண்ணீரை அப்பெண்ணிடம் கொடுத்தனர். அப்பெண்ணும் தண்ணீரை குடித்தார். அதனை குடித்த சிறிது நேரத்தில் அப்பெண்ணுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனே அப்பெண்ணுடன் உறங்கிக்கொண்டிருந்த அவரது 2 வயது மகனை அடுத்த படுக்கைக்கு மாற்றிவிட்டு இரண்டு பேரும் சேர்ந்து அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். ராஜ்காட் முதல் அலிகார் ரயில் நிலையம் வரை இந்த சம்பவம் நடந்துள்ளது.

அப்பெண் அரை மயக்கத்தில் சத்தம் போட்டு கத்த முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். மறுநாள் காலையில் அப்பெண் தான் செல்லவேண்டிய இடத்திற்கு சென்றார். நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறவில்லை. செல்லவேண்டிய இடத்திற்கு சென்றுவிட்டு தனது சொந்த ஊருக்கு வந்த போது நடந்த சம்பவம் குறித்து தனது கணவரிடம் அப்பெண் தெரிவித்தார்.

ஓடும் ரயிலில் பெண் பலாத்காரம்.. டிக்கெட் பரிசோதகர் கைது.. நண்பருக்கு வலை..!

உடனே அவர்கள் இது குறித்து ரயில்வே ஹெல்ப்லைன் மூலம் புகார் செய்தனர். பின்னர் டிக்கெட் பரிசோதகருக்கு எதிராக எழுத்து மூலமும் புகார் செய்தனர். ரயில்வே போலீஸ் எஸ்பி அபர்னா குப்தா உடனே பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றார். அதோடு இது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் ரயில்வே போலீசார் ராஜுசிங்கை கைது செய்தனர். அதோடு அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அவருடன் சேர்ந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். ரயில்வே டிக்கெட் பரிசோதகரே ரயிலில் பயணம் செய்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending News

Latest News

You May Like