இன்று மதியம் வரை மட்டுமே மூலவர் தரிசனம்!!
பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மூலவரை இன்று மதியம் வரை மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா வரும் 27ஆம் தேதி காலை 8 மணி முதல் 9 மணி வரை மலைக்கோயிலில் நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழாவையொட்டி மலைக் கோயிலில் யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சன்னதி திரையிடப்பட உள்ளது. அதனால் இன்று மதியம் வரை மட்டுமே பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய முடியும். அதன் காரணமாக பழனிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து காவடி சுமந்து ஆடி பாடி கிரிவலம் வந்து மலை மீது சென்று முருகனை தரிசிக்கின்றனர். பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
முன்னதாக பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக பதிவு செய்த பக்தர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ஆயிரம் பக்தர்களுக்கும் அவர்கள் கைபேசி மற்றும் மெயில் ஆகியவற்றிற்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
அவர்கள் இன்று முதல் 25ஆம் தேதிக்குள் பழனி திருக்கோவில் அலுவலகம் நேரில் சென்று தங்களது அசல் அடையாள அட்டையை காட்டி நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டுமென திருக்கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
newstm.in