1. Home
  2. தமிழ்நாடு

கள்ளக்காதல் விவகாரம்.. மனைவியின் அண்ணனை கொலை செய்த மைத்துனர் போலீசில் சரண்..!

கள்ளக்காதல் விவகாரம்.. மனைவியின் அண்ணனை கொலை செய்த மைத்துனர் போலீசில் சரண்..!

பெங்களூருவில், கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியில் அண்ணனை கத்தியால் வெட்டிக் கொலை செய்த மைத்துனர் போலீசில் சரண் அடைந்தார்.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்தவர் சதீஷ் (30). இவர் பெங்களூரு கெங்கேரி பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சதீசின் தங்கைக்கும், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர், வெங்கடேசும் அவரது மனைவியும் கெங்கேரியில் வசித்து வந்தனர்.


இந்த நிலையில் சதீசுக்கும், திருமணமாகி கணவரைப் பிரிந்த வெங்கடேசின் தங்கைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த வெங்கடேஷ், கள்ளக்காதலை கைவிடும்படி சதீசிடம் கூறியுள்ளார். ஆனால், கள்ளக்காதலை கைவிட சதீஷ் மறுத்து விட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கள்ளக்காதல் விவகாரத்தில் சதீஷ், வெங்கடேஷ் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீசை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் உடலில் பலத்த வெட்டு காயம் அடைந்த சதீஷ் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.


சதீஷ் கொலை செய்யப்பட்டது பற்றி அறிந்ததும் கெங்கேரி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் சதீசை, அவரது மைத்துனர் வெங்கடேஷ் கொலை செய்தது தெரியவந்தது. தப்பி ஓடிய வெங்கடேசை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கெங்கேரி காவல் நிலையத்திற்கு சென்று வெங்கடேஷ் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Trending News

Latest News

You May Like