பெரும் சோகம்.. மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் பலி..!
பொங்கல் பண்டிகையையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் காளை முட்டி ஒருவர் பலியானார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ரேக்ளா போட்டி மற்றும் சேவல் சண்டை என பல போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே.ராயபுரம் கிராமத்தில் இன்று (ஜன. 17-ம் தேதி) மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. இதனைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
இதற்கிடையே, காளையை அடக்க முயன்றபோது புதுவயல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (50) என்பவரை சீறிப்பாய்ந்து வந்த காளை முட்டி தூக்கியது. இதில் அவர் குடல் சரிந்தது. உடனடியாக மீட்பு குழுவினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.