இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரட்டை உலக சாதனை!!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இந்திய அணியுடன் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையேயான 3 போட்டிகொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
அடுத்ததாக இரு அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா-சும்பன் கில் களமிறங்கினர். இதில் இலங்கை வீரர் கருணாரத்னே வீசிய 16-வது ஓவரில் ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து விராட் கோலியுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. 97 பந்துகளில் 14 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசி 116 ரன்கள் குவித்த சுப்மன் கில், இலங்கை வீரர் ரஜிதாவின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதையடுத்து விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்தார். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 38 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறிய நிலையில், அடுத்து வந்த கே.எல்.ராகுல் 7 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 4 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் நிலைத்து நின்று அதிரடி காட்டிய விராட் கோலி, 100 ரன்களை கடந்து இலங்கை வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 110 பந்துகளில் 13 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களை பறக்கவிட்டு 166 ரன்கள் குவித்த விராட் கோலி, இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்தது.
அதைத்தொடர்ந்து 391 என்ற பெரிய இலக்கை துரத்திய இலங்கைக்கு அவிஷ்கா பெர்ணாண்டோ 1, நுவனிடு பெர்னாண்டோ 19, குசால் மெண்டிஸ் 4 என 3 முக்கிய டாப் ஆர்டர் வீரர்களை அடுத்தடுத்த ஓவர்களில் முகமது சிராஜ் தனது அற்புதமான பந்து வீச்சால் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க செய்தார்.
அதனைத் தொடர்ந்து வந்த அசலங்கா, ஹசரங்கா, கருணரத்னே ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்த களமிறங்கிய கேப்டன் சனாகா 11 ரன்னிலும், வெல்லலேகே 3 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இறுதியாக 22 ஓவரில் 73 ரன்களுக்கு சுருண்டு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். அதனால் 317 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் 300+ ரன்கள் வித்தியாசத்தில் வென்ற முதல் அணி மற்றும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற இரட்டை உலக சாதனைகளை படைத்தது.