பனிமூட்டத்தால் ரயில், விமான சேவை பாதிப்பு...

கடும் பனிமூட்டம் காரணமாக வடமாநிலங்களில் ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டது.
வட இந்தியா முழுவதும் குளிர் அலை மற்றும் அடர்ந்த பனிமூட்டமான வானிலையின் பிடியில் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக ஏறக்குறைய 26 ரயில்கள் இன்று தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அடர்ந்த பனிமூட்டம் மற்றும் கடும் குளிர் காரணமாக உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இன்று பெரும்பாலான ரயில்கள் 6-7 மணிநேரம் தாமதமாக இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் ரத்து செய்யப்பட்டது குறித்து முன்னதாக அறிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பனிமூட்டம் காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதே போன்று டெல்லியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து சிம்லா, வாரணாசி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
newstm.in