சபரிமலை செல்லும் பக்தர்களே.. மறந்தும் இதை கொண்டுபோய்டாதீங்க..!
சபரிமலைக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்களின் புகைப்படங்களை கொண்டு செல்லவும், சபரிமலை சன்னிதானத்தில் டிரம்ஸ் இசைக்கருவிகளை இசைக்கவும் தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை சன்னிதானத்திற்கு செல்லும் ஒரு சில பக்தர்கள் டிரம்ஸ் உள்ளிட்ட இசைக் கருவிகளுடன் அய்யப்ப கானம் பாடி சபரிமலைக்கு செல்வது வழக்கம். மேலும் சில பக்தர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களுடன் செல்கின்றனர்.
இந்நிலையில், சபரிமலை தரிசனத்திற்கு சென்று திரும்பிய பக்தர் ஒருவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘டிரம்ஸ் உள்ளிட்ட உபகரணங்களை சன்னிதானத்தில் இசைக்க தடை விதிக்க வேண்டும். அத்துடன், அரசியல் தலைவர்கள், நடிகர்களின் படங்களை சபரிமலைக்கு கொண்டு செல்லவதற்கும் தடை விதிக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த ஐகோர்ட், சபரிமலை சன்னிதானத்தில் டிரம்ஸ் இசைக்கருவிகளை இசைக்க தடை விதித்தது. மேலும் அரசியல், சினிமா பிரமுகர்களின் படங்களை பக்தர்கள் சபரிமலைக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கக் கூடாது. இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.