பக்தர்கள் கோவிலில் தங்கக்கூடாது.. கலெக்டர் அதிரடி உத்தரவு..!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழா இந்த மாதம் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்பி பாலாஜி சரவணன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், கந்தசஷ்டி திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவும், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவும் அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினர்.
கந்த சஷ்டி திருவிழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 லட்சம் லிட்டர் வீதம் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
வரும் 30-ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் வருகை தருவதால் பல்வேறு வழித்தடங்களில் 350 அரசு பேருந்துகள் கூடுதலாக இயக்கவும், சென்னை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி திருவிழா காலங்களில் நகர் முழுவதும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் செல்போன், தொலைபேசி சீராக இயங்கத்தக்க வகையில் தற்காலிக செல்போன் கோபுரம் அமைக்க பிஎஸ்என்எல் நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கந்தசஷ்டி திருவிழாவிற்கு மாலை அணிந்து வரும் பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.