தாயின் கள்ளக்காதலனுக்கும் மகன்களுக்கும் ஏற்பட்ட தகராறில் தலையில் கிரைண்டர் குழவி கல்லை போட்டு கொலை..!!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சிவஞானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (42). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து தண்ணீர் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகளுடன் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி கண்மாயில் காயங்களுடன் கணேசன் உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கணேசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அவரது மனைவி சித்ராவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், கணேசனுக்கும், வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தொடர்பு உண்டு என்றும், வாரத்தில் 3 நாட்கள் அங்கு தான் இருப்பார் என்றும், அவர்களிடம் விசாரித்தால் தான் அவர் எப்படி இறந்தார்? என்று தெரியவரும் என்று கூறி அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து போலீசார் வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த அந்த பெண்ணின் போனுக்கு தொடர்பு கொண்ட போது அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. வீட்டுக்கு சென்று பார்த்தபோது பூட்டிக் கிடந்தது. எனவே கணேசனை அந்தப் பெண் சிலருடன் சேர்ந்து அடித்துக் கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்தப் பெண் வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த முருகன் மனைவி துரைச்சி (40) என்பதும், 7 வருடங்களுக்கு முன்பு அவரது கணவர் இறந்தவுடன், கணேசனுடன் தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது. துரைச்சிக்கு பூல்பாண்டி (19), அய்யனார் (15), ரமேஷ் (14) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். துரைச்சியின் செல்போனை, சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் அவர் நாகர்கோவில் அருகே பழவூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து சென்று உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த துரைச்சி (40) மற்றும் அவரது மகன்களையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில், வாரத்தில் பெரும்பான்மையான நாட்கள் துரைச்சியுடனேயே கணேசன் தங்கி வந்துள்ளார். 7 வருடங்களுக்கு முன்பு துரைச்சியின் மகன்கள் வயதில் சிறியவர்கள் என்பதால், விவரம் தெரியாமல் இருந்தது. தற்போது மூத்த மகன் பூல்பாண்டி மற்றும் அவரது தம்பிகளுக்கு விவரம் தெரிந்து, தாயையும், கணேசனையும் கண்டித்தனர். இதனால் கணேசனை விட்டு துரைச்சி விலகத் தொடங்கினார். ஆனால் இதை கணேசன் ஏற்றுக் கொள்ளவில்லை.
வியாழக்கிழமை இரவு துரைச்சி வீட்டுக்கு வழக்கம் போல் கணேசன் வந்தார். மகன்கள் முன்னிலையிலேயே அவரை தனியாக இருக்க வற்புறுத்தினார். இதற்கு துரைச்சியின் மகன்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இனி வீட்டுக்கு வரக் கூடாது என்று கணேசனிடம் கூறினர். இதில் ஆத்திரம் அடைந்த அவர் பூல்பாண்டியின் தம்பியை அடித்தாக கூறப்படுகிறது. இதை பூல்பாண்டி தடுத்தார். அப்போது கணேசன், இன்று இரவுக்குள் உங்கள் அம்மாவை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
அதன் பின்னர் அவர் மது போதையில் தூங்கி விட்டார். மறுநாள் அதிகாலை 3 மணி அளவில் தாயை கணேசன் கொன்று விடுவதற்குள் நாம் முந்தி விட வேண்டும் என்று நினைத்த பூல்பாண்டி வீட்டில் கிடந்த கிரைண்டர் குழவி கல்லை அவரது தலையில் 3 முறை போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி கணேசன் உயிரிழந்தார்.அதன்பின்னர் அவரது உடலை ஆலம்பட்டி கண்மாயில் வீசி விட்டு தாயை அழைத்துக் கொண்டு பழவூர் தப்பிச் சென்றதது, தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.