கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை... போலீசார் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!
![கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை... போலீசார் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!](https://newstm.in/static/c1e/client/106785/migrated/44aafa654ccafa1096963800be041340.webp?width=836&height=470&resizemode=4)
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சுகன். இவரது மகள் தரணி (19). இவர், விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் செவிலியர் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தரணி தனது வீட்டில் இருந்த தோட்டத்தில் இருந்தபோது, தோட்டத்தில் மறைந்திருந்த வாலிபர் ஒருவர் தரணியைப் பின்பக்கமாகப் பிடித்து அவரது கழுத்தை அறுத்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
![கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை... போலீசார் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!](https://newstm.in/static/c1e/client/106785/migrated/8456f9e8b94d1e8e0555d27619474dab.webp)
தரணியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் தரணியின் உடலை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், அந்த இளைஞரையும் பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கணேஷ் என்ற 25 வயது இளைஞரை தரணி காதலித்து வந்ததாகவும், கணேஷ் கஞ்சாவிற்கு அடிமையானதால் அவருடனான பேச்சை தரணி குறைத்துக் கொண்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தரணியை கணேஷ் கொலை செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தரணியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞர் கணேஷை போலீசார் இரண்டு மணிநேரத்தில் கைது செய்துள்ளனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் இருந்தபோதே மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.