கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியபோது தோனியை தவிர தனக்கு யாரும் மெசேஜ் அனுப்பவில்லை..!!
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் செப்டம்பர் 11-ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் லீக் போட்டிகள் கடந்த 2-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் குரூப் ஏ பிரிவிலும், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில், துபாயில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் விராட் கோலி அதிகபட்சமாக 44 பந்துகளுக்கு 60 ரன்கள் குவித்தார். 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, கடைசி ஓவரில், 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்து இந்தியாவை வீழ்த்தியது.
இந்தப் போட்டிக்குப் பின் செய்தியாளர்களைச் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “இந்த ஆண்டு ஜனவரி மாதம், நான் டெஸ்ட் போட்டி தொடரின் கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது, தோனி மட்டும் தான் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். நிறைய பேரிடம் என்னுடைய தொலைபேசி எண் இருக்கிறது. ஆனால் தோனியைத் தவிர எனக்கு யாரும் மெசேஜ் அனுப்பவில்லை. நீங்கள் ஒருவருடன் உண்மையான தொடர்பு மற்றும் மரியாதை வைத்திருந்தால், இரு தரப்பிலிருந்தும் பாதுகாப்பு உணர்வு இருப்பதை நீங்கள் உணர முடியும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தோனி எனக்கு மெசேஜ் அனுப்பியதை நான் அப்படி தான் பார்க்கிறேன். தோனியிடமிருந்து எனக்கு எதுவும் தேவையில்லை. அவருக்கும் என்னிடமிருந்து எதுவும் தேவைப்படப் போவதில்லை. யாரிடமாவது ஒரு விஷயத்தை நான் கூற விரும்பினால் அவர்களைத் தனியாக அணுகி தான் நான் கூறுவேன். தொலைக்காட்சி மூலமாக நீங்கள் எனக்கு ஆலோசனை வழங்க விரும்பினால், அது எனக்கு எந்த மதிப்பையும் அளிக்காது. நீங்கள் எனக்கு அளிக்கும் ஆலோசனைகளை, நேருக்கு நேர் என்னிடம் தெரியப்படுத்தினால் அதனை நான் நேர்மையாகக் கருதுவேன்.” என்றார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் மிகவும் மன அழுத்ததில் இருந்ததாகக் கோலி தெரிவித்தார். அதிலிருந்து மீண்டு வர தான் மிகவும் சிறமபட்டதாக கூறியிருந்த நிலையில், தற்போது அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியபோது தோனியை தவிர யாரும் எனக்கு மெசேஜ் செய்யவில்லை என்ற கருத்து கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகியுள்ளது.