1. Home
  2. விளையாட்டு

டெல்லியை வீழ்த்தி ஃபைனலுக்கு சென்றது சிஎஸ்கே !

டெல்லியை வீழ்த்தி ஃபைனலுக்கு சென்றது சிஎஸ்கே !

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2 -ஆவது தகுதி சுற்றுப்போட்டியில், டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஃபைனலுக்கு சென்றது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டுபிளிசஸ், வாட்சன் களமிறங்கினார்கள்.

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஏடாகூடமான ரன் - அவுட் ஆகியிருக்கும், ஆனால், டெல்லி வீரர்கள் சொதப்பியதால் அது தவிர்க்கப்பட்டது. இதன் பிறகு டுபிளிசஸ் அதிரடியாக ஆட தொடங்கினார். ஆனால், மறுபுறத்தில் இருந்த வாட்சன் அடிக்க முடியாமல் தவித்து வந்தார். இருப்பினும், சீரான இடைவெளியில் இருவரும் ரன்களை குவித்து வந்தனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில், பவர் பிளேயில் 30 ரன்கள் கூட எடுக்காமல் சென்னையின் தொடக்க வீரர்கள் விக்கெட்டை இழந்து வருவது தொடர் கதையாகி வந்த நிலையில், அதற்கு முட்டுகட்டை போட்டனர் வாட்சன், டுபிளிசஸ்.

அருமையாக ஆடி வந்த டுபிளிசஸ் 37 பந்துகளில் அரை சதம் அடித்து, சிறிது நேரத்திலேயே அவுட் ஆனார். வாட்சன், டுபிளிசஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தது. இதன் பிறகு அதிரடி ஆடியாக வாட்சன் 31 பந்தில் அரைசதம் அடித்து, மிஸ்ரா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதன்பிறகு களமிறங்கிய ரெய்னா 11 ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ராயுடு மற்றும் தோனி ஆட்டத்தை முடிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தோனி 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பின் 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, சென்னை அணி ஃபைனலுக்கு சென்றது.

இதையடுத்து, நாளை மறுநாள் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், சென்னை அணி மும்பையுடன் பலபரீட்சை நடத்துகிறது.

இன்றைய பிளே ஆஃப் போட்டியில் வென்றதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றி்ல் 8 -ஆவது முறையாக சென்னை அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது என்பதும், ஐபிஎல் தொடரில் இதுவரை இறுதிப் போட்டிக்கு தகுதிபெறாத ஒரே அணி டெல்லி என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like