நீங்கள் இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டீர்கள் என்றால்...
- நீங்கள் இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டீர்கள் என்றால், உங்களுக்கு பெயரும், மிக சிறப்பான புகழும் உண்டாகும் என்பது பொருள்.
- ஒருவருக்கு அவர்களின் இறந்து போன தாய்-தந்தையர் கனவில் தோன்றுவார்களேயானால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்து அல்லது இடையூறைச் சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்திருக்கிறார்கள் என்று பொருள். இது பலரின் வாழ்வில் ஏற்பட்ட அனுபவ உண்மையாகும்.
- தான் இறந்துவிட்டதுபோல் ஒருவருக்குக் கனவு வருமானால், அது நன்மைகளையே குறிப்பிடும் என எடுத்து கொள்ளலாம். சுக வாழ்க்கை உண்டாகும். உங்களின் உறவினர் ஒருவர் இறந்து விட்டது போல் கனவு வந்தால், அவருடைய துன்பங்கள் வெகு விரைவில் நீங்கும் என்பதைக் குறிக்கிறது.
- உங்கள் நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு வந்தால், வெகு விரைவில் ஏதேனும் நற்செய்தி ஒன்று வரும் என்பது பொருள்.
- ஒரு நபரின் குழந்தைகள் இறப்பதுபோல் கனவு வந்தால், அவருக்கு வரவிருக்கின்ற பேராபத்து ஒன்றைக் குறிப்பிடும். தன்னுடைய மனைவி இறந்து விட்டாற் போல் கனவு உண்டானால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க இருப்பதைக் குறிப்பிடும். ஒருவரின் இறந்து போன மனைவி, விண்ணுலகில் மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு கண்டால், அவரின் வாழ்க்கை நிம்மதியாக அமையும். அதே நேரம் ,மறைந்த மனைவியின் முகம் துயரம் தோய்ந்ததாக இருப்பின் வாழ்க்கை நிலையற்றதாக மாறும்.
- நாம் பிறரை அடிப்பது போல் கனவு கண்டால், நண்பர்களால் புகழப்படும் நிலை ஏற்படும். மேலும் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள், புகழ் பன்மடங்கு பெருகும். தான் அடிபட்டு காயமடைந்திருப்பது போல் கனவு கண்டால், தன அபிவிருத்தி உண்டாகும். எனினும் கத்தி, துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்ததாக கனவு காண்பது நன்மையான பலன் தராது. உங்களுக்கு பழி ஏதேனும் வந்து சேரும்.
- பிரதமர், ஜனாதிபதி போன்றோர்களுடன் அறிமுகம் ஆவது போல் கனவு கண்டால், சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ்தும், மதிப்பும் உண்டாகும். மணமாகாத இளம்பெண்கள் மேற்சொன்ன படி கனவு கண்டால், அவளை மணம் முடிக்க போகும் வருங்கால கணவன்,அப்பெண்ணின் குடும்பத்தைவிட பன்மடங்கு வசதி மிக்கவனாக இருப்பான் என கொள்ளலாம். அரச குடும்பத்தாருடன் பழகுவது போன்ற கனவு வந்தால், உங்களின் நண்பர்கள் மூலமாக பண உதவி கிடைக்கும்.
- அப்ஸ்ரஸ் எனப்படும் தேவலோகப் பெண்களை ஆண்கள் தங்களின் கனவில் கண்டால், எதிர்பாராத நன்மைகள் அவர்களுக்கு உண்டாகும். திருமணமாகாத பெண்களின் கனவில் வந்தால் விரைவில் அப்பெண்களுக்கு திருமணம் நிகழும். திருமணமான பெண்கள் கனவில் வந்தால் மிகுந்த பொருள் வரவு உண்டு.
- அழகு இல்லாத பெண் ஒருத்தியை, திருமணமாகாத ஒரு ஆண்மகன் கனவில் காணும் பட்சத்தில், அதற்கு நேர்மாறான பலனாகமிகவும் அழகான பெண் அந்த ஆணுக்கு மனைவியாக அமைவாள்.
- பார்ப்பதற்கு விந்தையான மனிதன் அல்லது நூதனப் பொருட்கள் உங்கள் கனவில் வந்தால், எதிர்வரும் தீமையைச் சுட்டிக்காட்டும் அறிகுறியாகும். நம்பிக்கை மோசடி – ஏமாற்றம் போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகமாகும்.
- அடிதடி, தகராறு, சண்டை சச்சரவுகளில் நீங்கள் சிக்கிக் கொண்டு தவிப்பது போல் கனவு வந்தால், உங்கள் வாழ்க்கை அமைதியானதாக உங்களை சுற்றியிருக்கும் எல்லோருடனும் சுமுக உறவு கொண்டதாக அமையும். சண்டையில், பிறர் நம்மை அடிப்பது போன்று கனவு கண்டால் நமக்கு பகைவர்கள் இல்லை என்று எடுத்து கொள்ளலாம். பகைவர் இருப்பின் அவர்களும் பகை மறந்து உங்களுக்கு நண்பர்களாக மாறும் சூழல் உண்டாகும்.
- ஒருவர் வாய்விட்டு பலமாக அழுது கொண்டிருப்பது போல் கனவு கண்டால், அவரது வாழ்க்கையில் பல இடையூறுகள் ஏற்படலாம்.
- உங்களுக்கு ஏதேனும் ஆபத்து, தொல்லைஏற்படுவதாக கனவு கண்டால், பலன் அதற்கு நேர்மாறாக வாழ்க்கை மகிழ்ச்சியானதாக, நிம்மதியுடையதாக அமையும். மற்றவர்கள் ஆபத்தில் சிக்கியிருப்பது போல் கனவு கண்டால், நண்பர்களால் தொந்தரவுகள் உண்டாகும்.
- ஒருவர் அரிசியைக் கனவில் கண்டாலோ அல்லது சந்தையில் வாங்கி வருவது போன்று கனவு கண்டாலோ அவர் செய்யும் தொழில் அபிவிருத்தி அடைந்து மிகுந்த தனலாபம் ஏற்படும்.
- கனவில் காணும் விலங்குகளும் பட்சிகளும் விநோதமாக காட்சி தருவது உண்டு. அவ்வகையில், கறுப்பு நிற அன்னப் பறவையைக் காண்பது அவ்வளவு நன்மையானது என கூற முடியாது. விடலை பருவ வயதில் உள்ள ஓர் இளைஞன் கனவில் கறுப்பு நிற அன்னம் தோன்றுமானால், அவன் வாழ்வில் பெரும் ஏமாற்றங்களுக்கு, விரக்திகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும் எனலாம். மேலும் அந்த இளைஞனின் தன்மானத்துக்கு இழுக்கும், அபவாதமும் உண்டாகும். திருமணமாகாத இளம் பெண் ஒருத்தியின் கனவில் கறுப்பு அன்னப் பறவை கனவில் வந்தால், வெகு விரைவில் அப்பெண் ஏதேனும் வருத்தத்துக்கு உரிய செய்தியைக் கேட்க நேரிடலாம். அதே சமயம் வெள்ளைநிற அன்னத்தைக் காண்பவர் வாழ்க்கை மகிழ்ச்சியும், இன்பங்களும் அதிகம் நிறைந்ததாக இருக்கும்.
- உங்களுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியர்களில் எவரேனும் ஒருவரை கனவில் காணும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையில் வளங்கள் அனைத்தும் அமோகமாகப் பெருகும். பண வரவும் அதிகரிக்கும்.
- நமது கனவில் இறைவன் வாழும் கோயிலைக் காண்பது நன்மையான பலன்களைத் தரும். செய்யும் தொழில், வியாபாரம் முன்னேறும். நவீன ரக தொழில்களில் ஈடுபாடு உண்டாகும். மக்களுக்கு சேவை புரியும் அறச்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெற வழிவகை செய்யும். புனித யாத்திரைகள் மேற்கொள்ளும் சூழல் உண்டாகும். அதே நேரம் பாழடைந்த அல்லது தெய்வ விக்ரகம் இல்லாத கோயிலைக் கனவில் காண்பது நல்லதல்ல. அத்தகைய கனவு நீங்கள் முயற்சிக்கும் செயல்களில் தோல்வியும், பொருள் நஷ்டம் போன்ற பலன்களை தரும். நீங்கள் கோயிலில் நுழைந்து இறைவனை வழிபடுவதுபோல் கனவு தோன்றும் எனில், ஈடுபடும் செயல்களில் முதலில் சில தடங்கல்கள் ஏற்பாட்டாலும் முடிவில் அந்த இறைவனின் அருளால் அனைத்தும் நன்மையாகவே முடியும். கனவில் கோயில் மணியோசையைக் கேட்பதாக உணர்ந்தால், அதற்கும் சில பலன்கள் உண்டு. கோயில் மணியோசை ஒரே சீராக ஒலிப்பது போல் உணர்ந்தால் பிள்ளையில்லா தம்பதிகளுக்கு குழந்தைச் செல்வம் உண்டாகும். பணவரவும் அதிகரிக்கும். ஆனால் கோயில் மணியோசை சீரற்றதாக ஒலிப்பது போன்று உணர்ந்தால் உங்கள் வாழ்வில் பல சிக்கல்கள் உருவாவதோடு பண விரயமும் ஏற்படும்.
- உங்கள் கனவில் ஆலமரத்தைக் கண்டால், நீங்கள் செய்கின்ற தொழில் மேலும் அபிவிருத்தி ஆகும். பொருள் வரவும், உங்களின் சுற்றத்தார் இணக்கமும், பாசமும் உண்டாகும்.
- உங்களை விட வயதில் மூத்தவர்கள் அல்லது மகான்கள் உங்களை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வது போல் கனவு கண்டால், நீங்கள் செய்யும் தொழிலில் மேன்மையும், மிகுந்த பொருள் சேர்க்கையும் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகளும் உங்களுக்கு வந்து சேரும்.
- கனவில் ஆரஞ்சுப் பழத்தைக் காண்பவருக்கு, எதிர்பாராத பொருளிழப்பு ஏற்படும். நோய் அல்லது விபத்தில் உடலில் காயம் உண்டாகலாம். உங்கள் மீது வீண் பழி சுமத்தப்பட்டு அவப்பெயர் ஏற்படக்கூடும்.
- உங்கள் கனவில் இஞ்சியைக் கண்டால், உங்களுக்கு நோய்களால் பாதிப்பு ஏற்படக்கூடும்.
- ஒருவர் தனது கனவில் இனிப்பான பலகாரங்களைக் காண்பது மிகவும் நல்லதாகும். ஏனெனில் உங்களின் வருங்கால வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பதற்கான அறிகுறி அதுவாகும்.
- ஒருவர் தான் உடல் இளைத்து விட்டது போல் கனவு காண்பது, அவரது குடும்பத்தின் நிலை மேன்மையுறும் என்பதற்கான அறிகுறியாகும்.
- இரும்பை கனவில் காண்பவருக்குப் பொதுவாகவே மனோவலிமை அதிகமிருக்கும். ஆனாலும் மிகவும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். சிலருக்கு கஷ்டங்கள் வந்து நீங்கும். வேறு சிலருக்கு, தரித்திர நிலையை உண்டாக்கும். இரும்பைத் தொட்டு கையில் எடுப்பது போல் கனவு காண்பது சிறந்த பலனை தராது.
- பசு கன்று போடுவதைக் கனவில் காண்பது நல்லதல்ல. துன்பங்கள் அதிகம் வந்து சேரும். ஆனால் கன்று ஈன்ற பசுவைக் காண்பது உங்களுக்கு அதிக செல்வ வளத்தை ஏற்படுத்தும்.
- பணியாற்றுவதுபோல் கனவு கண்டால் உங்களுக்கு நற்காலம் நெருங்கி விட்டது என்பதற்கான அறிகுறியாகும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும் என்பதை இது குறிக்கும்.நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது போல் கனவு கண்டால், அவ்வாறே நிஜத்தில் நடக்கலாம். அல்லது நீங்கள் ஏதேனும் நிர்வாகத் தவறுகள் செய்து அதனால் உயரதிகாரிகளின் கோபத்தை சம்பாதிக்க நேரிடும். வருங்கால உயர்வுகளும் பாதிக்கக்கூடும். தொழில் செய்பவர்கள், அதில் பிரச்னைகள் எழுவதாக கனவு கண்டால், அவர்களின் தொழிலில் சிக்கல்கள் ஏற்படலாம்.